புதுடெல்லி: இரண்டு புதிய தேர்தல் ஆணையர்களையும் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தின் அடிப்படையில் நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தில் மூன்று பேர் ஆணையர்களாக இருப்பார்கள். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் உள்ளார். தேர்தல் ஆணையர் ஒருவர் கடந்த மாதம் ஓய்வு பெற்ற நிலையில், மற்றொரு ஆணையரான அருண் கோயல் கடந்த சனிக்கிழமை திடீரென ராஜினாமா செய்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயா தாகூர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘‘இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் காலியாக இருக்கும் இரண்டு ஆணையர்களின் பதவியை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தற்போதைய புதிய சட்டத்தின் அடிப்படையில் நியமனம் செய்ய ஒன்றிய அரசுக்கு தடை விதிக்க வேண்டும். ஏனெனில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன குழு தொடர்பான சட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்ட ஒன்றிய அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் வெளிப்படையான சுதந்திரமான குழு அமைக்கப்பட்ட வேண்டும் என்று எனது தரப்பில் முன்னதாக தொடரப்பட்ட வழக்கில், ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. மேலும் அந்த வழக்கில் இறுதி உத்தரவு எதுவும் தற்போது வரையில் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post புதிய சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு appeared first on Dinakaran.